Tuesday, February 24, 2009

ஈழத்தின் வரலாற்றுச் சுவடுகள் - எளிய தொகுப்பு பாகம் 1

வணக்கம், ஈழ வரலாற்றை தெளிவாக அறிய முற்பட்டபோது. நான் படித்து அறிந்த செய்திகளை, இன்னும் பலருக்கு எளிய வடிவத்தில் தந்தால் பயனுள்ளதாக இருக்குமே என்று எண்ணி, இந்த பதிவை எழுதுகிறேன். என்னால் இயன்ற வரை சுருக்கியும், தெளிவான வரலாற்றுச் சான்றுகளை பதிவுசெய்தும் இருக்கிறேன். பக்க சார்பு இல்லாமல் இருக்க, இயன்ற வரை 'மூல' இணைப்புக்களையும் (சான்றாக) தந்துள்ளேன்.


ஓரளவு வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கப்பட்ட பிறகான காலத்திலிருந்து (பாதிரியார் பெர்னாவோ டி குவைறோஸ் 'perna de quiros' சிலோனின் மதமாற்றங்கள் பற்றி எழுதிய நூல்களினூடாக), சற்று சுருக்கமாக சிலோனின் வரலாற்றை பார்போம். சங்கிலியன் என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான். சங்கிலியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலம், போர்த்துகல் இலங்கையில் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த காலமாகும். இலங்கையின் அரசியலிலும் தலையிடத் தொடங்கியிருந்தனர். இவர்களுடன் வந்த கத்தோலிக்க குருமார்கள் சமயப் பிரசாரங்களிலும், மத மாற்றங்களிலும் ஈடுபட்டிருந்தனர். யாழ்ப்பாண அரசைச் சேர்ந்த மன்னார் பகுதியில் பெருமளவில் மதமாற்றம் நடைபெற்றதைக் கேள்வியுற்று, மன்னாரில் புனித சவேரியாரின் பாதிரியார்களால் கிறிஸ்தவ மதத்துக்கு மதத்துக்கு மாறியவர்களையெல்லாம் தானே நேரில் சென்று வெட்டிக் கொன்றான், போத்துக்கேயர் அந்த இடத்தில் வேதசாட்சிகள் கோயில் என்ற தேவாலயத்தைக் கட்டினார்கள், அது இன்றும் மன்னாருக்கும், பேசாலைக்குமிடையிலுள்ள தோட்டவெளி என்னுமிடத்திலுண்டு. புனித சவேரியார் கிறிஸ்தவர்களைக் கொன்றதற்கு சங்கிலி குமாரனைப் பழிவாங்குமாறு லிஸ்பனுக்குக் கடிதம் எழுதியதால் தான், போத்துக்கேயர் யாழ்ப்பாணத்தின் மீது, சிங்களக் கூலிப்படையின் உதவியுடன் போர் தொடுத்தார்கள்.யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்து சங்கிலியனைத் தண்டிக்க வேண்டுமென்று இவர்கள் கோவாவில் இருந்த போத்துக்கேயர் தலைமையையும், போத்துக்கல் அரசனையும் பலவழிகளிலும் வற்புறுத்தி வந்தனர். 1560 இல் கோவாவில் போர்த்துக்கேயப் பதிலாளுநனாக (Viceroy) இருந்த கொன்ஸ்டன்டீனோ த பிறகன்சா(Constantino de Braganca) என்பவன் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்து வந்தான்.

சிறப்பான போர் அனுபவம் கொண்டிருந்த போத்துக்கேயர் தலைநகரான நல்லுரை இலகுவாகக் கைப்பற்றினர். சங்கிலியன் தனது அரண்மனையை எரியூட்டிவிட்டு வன்னிப் பகுதிக்குப் பின்வாங்கினான். பின்னர் நீண்ட கால இடப்பெயர்வினால் வருந்திய போத்துகேய தலைமைக்கு தூது அனுப்பி, போத்துக்கேயருக்குத் திறை செலுத்துவது உட்பட்ட சில நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டு, நல்லூர் திரும்பினான். சங்கிலி மேலும் சில ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். பின்னர் இவன் மக்களால் அகற்றப்பட்டதாகப் போத்துக்கேயப் பாதிரியாரான குவைறோஸ் குறிப்பிட்டுள்ளார்.



1591ல் ஆந்த்ரே போர்த்தாடொ(Andre Furtado) என்பவன் தலைமையில், போத்துக்கீசப் படைகள் மீண்டும் யாழ்ப்பாணத்தைத் தாக்கின. நல்லூரைக் கைப்பற்றி அரசனைக் கொன்ற போத்துக்கீசர், எதிர்மன்னசிங்கம் என்னும் இளவரசன் ஒருவனை அரசனாக்கி அவனிடம் திறை பெறவும் ஒப்பந்தம் செய்துகொண்டு திரும்பினர். எதிர்மன்னசிங்கம் போத்துக்கீசரின் உதவியுடன் ('கடுமையான போத்துக்கீச மேலாதிக்கத்தின் கீழ்') 25 வருடங்கள் யாழ்ப்பாணத்தை ஆண்டான். 1616 ஆம் ஆண்டில் இவன் நோய்வாய்ப்பட்டு மரணமானான். பட்டத்துக்கு உரிமையுள்ளவனாக இருந்த இவனது மகன் சிறுவனாக இருந்தான். உரிய வயது வரும்வரை அவனையும், நாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பைத் தனது மருமகனான அரசகேசரி அரசன் ஒப்படைத்திருந்தான். எனினும், அரசகேசரியைக் கொன்று இப்பொறுப்பைச் சங்கிலி குமாரன் எடுத்துக்கொண்டான். இறுதியாக பெரும் போர் புரிந்து, அப்போது ஆட்சியை கைப்பற்றி இருந்த சங்கிலி குமரனை வீழ்த்தி யாழ்ப்பாணத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இவர்கள் ஆட்சி காலத்தில் மக்கள் கடும் வரிகளாலும், பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் ஒரு குறுகிய காலகட்டத்தில், யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் (Dutch) 1658 ஜூன் 22 கைப்பற்றி, யாழ்ப்பாண கோட்டையை ஆக்கிரமித்தனர். இந்த வீழ்ச்சியின் போது நல்லூர் எனும் ஊரில் இருந்த பல கோயில்களையும் சரஸ்வதி மண்டபம் என்ற பெரிய நூலகத்தயும் போத்துக்கேயர்கள் அழித்தாக குறிப்புகள் உள்ளன.

இந்த போரின் முடிவில் 1660 ல் கண்டி இராச்சியம் தவிர மற்ற பகுதிகள் அனைத்தும் ஒல்லாந்தர்(Dutch) வசமானது. ஒல்லாந்தர் ஆட்சி 1658 தொடக்கம் 1796இல் யாழ்ப்பாணத்தை பிரித்தாணியரிடம் பறிகொடுக்கும் வரை நடைபெற்றுவந்தது. யாழ்ப்பாணம் 138 ஆண்டு காலம் ஒல்லாந்தர் வசம் இருந்தது. இவர்களும் மக்களை கடுமையான வரிகள் மூலம் தொலைத்து எடுத்தனர் என்கிறது வரலாறு...

அதன்பின்னர், 25 மார்ச் 1802 ம் ஆண்டு அமியேன் ஒப்பந்தம் (Treaty of Amiens) மூலம் ஒல்லாந்தர்(Dutch) வசமிருந்த தீவின் அனைத்து பகுதிகளும் ஆங்கிலேயர் வசமானது..


ஆங்கிலேய காலனி ஆதிக்கம், 1803 ம் ஆண்டு கண்டியை கைப்பற்ற சூழ்ச்சியுடன் கூடிய 'கண்டி யுத்தம்' நடத்தி அப்போது ஆண்டுகொண்டிருந்த ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்(இயற்ப்பெயர் கண்ணுசாமி) என்ற இவன் தமிழ் நாட்டின் நாயக்கர் வம்சத்தில் தோன்றிய ஒரு இளவரசன் ஆவான்(சிங்கள அரசனிடம் இருந்து - முன்னைய அரசன் ஸ்ரீ இரஜாதி ராஜ சிங்கன் பிள்ளைகள் இன்றி இறந்தபோது ஆட்சயுரிமை பெற்றான்!).

இந்த அரசனை கைப்பற்றி, 1815 மார்ச் 2 ஆம் திகதி 'கண்டி ஒப்பந்தம்' என இன்று வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி அரசு பிரித்தானியருக்குக் முழுமையாக கொடுக்கப்பட்டது. அதாவது இந்தியாவில் இருந்ததைபோல் தமிழ் மற்றும் சிங்கள குறு மன்னர்களும் கப்பம் கட்டி தங்கள் பகுதிகளை நிர்வகிக்க அனுமதிக்கப்பட்டது.

இது மாதரியான வழக்கும் கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம் (Colebrooke Commission 1833) என்ற ஒப்பந்தத்தின் மூலம் சிதறிக் கிடந்த பல பகுதிகளை ஒருங்கினைத்ததன் மூலம் முடிவுக்கு வந்தது. இதன் பின்னர் இந்த ஒப்பந்தத்தினை செயல்படுத்தியதன் விளைவாக பிற்காலத்தில் இலங்கையின் இனப்பிரச்சினை உருவாக அடிக்கோலாக அமைந்தது!

19 ம் நூற்றாண்டு ஆரம்பாத்தில்
சிலோனின் செறிவான காபி மற்றும் தேயிலை ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பெருமையாக விளங்கியது. 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த முதலாளித்துவ வர்க்கம், இந்த தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய நிறைய ஆட்கள் தேவைப்பட்டதால் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான கூளித்தொழிலாளிகளை இறக்குமதி செய்ததது.

இதற்கிடையில், பத்தாம், பன்னிரெண்டாம் நூற்றாண்டில் பாண்டிய சோழ மன்னர்களின் வீழ்ச்சிக்கு பிறகு, சிங்களர்கள் ஆட்சியின் போது, மத்திய தெற்கு இலங்கைக்கு தமிழகத்திலிருந்து, மேல் சாதி சமூகத்தினர், வியாபாரம், மதம் ஆகிய நோக்கங்கலுக்காக ஊடுருவியதாக தெரிகிறது. இவர்களை இலங்கையின் உயர்தட்டு சமூகம் தன்னுடன் காலபோக்கில் இணைத்துக்கொண்டது தெரிகிறது. இவ்வாறாக இலங்கைக்கு இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த மக்கள் தொகை 10% சதவிகிதமாக இருந்தது...

1920 களில் ஆறுமுக நாவலர் உள்ளிட்ட பல தமிழர் தலைவர்கள், தமிழர் உரிமைகளுக்காக போராடினர். குறிப்பாக தமிழ் மொழி போதனைகள், பள்ளிகளின் கட்டுமானம், போன்ற சமூக பணிகளாகும். இந்த கால கட்டத்தில் தான் இந்தியாவிலும் இலங்கையிலும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களும் தீவிரமடைந்தன.

இன்னும் வரும்...

   

இந்த பதிவு பலருக்கு சென்றடைய விரும்பினால், தங்கள் வாக்கை பதிவுசெய்யுங்கள்.

No comments:

Post a Comment